Friday, May 11, 2012

கப்பல் கேப்டன் கடத்தி கொலை


சென்னை மதுரவாயிலை சேர்ந்த கப்பல் கேப்டன் கடன் தகராறில் காரில் கடத்தி திருவண்ணாமலையில் சுடுகாட்டில் எரித்து கொல்லப்பட்டார்.
இதுபற்றிய விபரம் வருமாறு:
சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூபாலன். சாஸ்திரி பவனில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருடைய மகன் டெல்லி பாபு (27). இவரது மனைவி ரம்யா (23). இவர் எம்பிஏ பட்டதாரி. டெல்லிபாபு சென்னை துறைமுகத்தில் கப்பல் கேப்டனாக இரண்டாம் நிலை அந்தஸ்து அதிகாரியாக பணியாற்றி வந்தார். 
கடந்த வாரம் தேர்வு எழுதி முதல் நிலை அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். கடந்த வாரம் 6ஆம் தேதி டெல்லிபாபு தன்னுடைய தாயார் காமாட்சி, பெரியம்மமா பட்வட்டம்மன் ஆகியோரை புதிதாய் வாங்கியிருந்த இன்னோவா காரில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
மாலை 4 மணிக்கு சென்றவர்கள் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார்கள். வீடு திரும்பியதும் வீட்டில் அனைவரையும் இறக்கிட்டு காரை மதுரவாயல் வல்லவன் நகரில் தான் வாங்கியுள்ள பிளாட்டின் போர்ட்டிக்கோவில் நிறுத்துவதற்காக சென்றார். சென்றவர் வீடு திரும்பவில்லை.
இரவு 10 மணி வரை அவரை எதிர்பார்த்துவிட்டு பெற்றோரும், உறவினர்களும் வல்லவன் நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அங்கே கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கார் கண்ணாடிகள் உடைந்து, கார் சக்கரங்கள் தேய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 
போலீசார் டெல்லிபாபுவின் புகைப்படம், காரின் நம்பர் ஆகியவைகளை வைத்துக்கொண்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை அருகே செங்கம் அருகே ஒரு சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல் டெல்லிபாபுவின் உடலாக இருக்குமா என்ற சந்தேகத்தில், செங்கம் போலீஸ் டிஎஸ்பி சென்னைக்கு தகவல் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் டெல்லிபாபுவின் தம்பி வாஞ்சிநாதன், செங்கம் சென்று பார்த்தார். அது தன்னுடைய அண்ணன் டெல்லிபாபுதான் என்று அடையாளம் காட்டினார். 
போலீஸ் விசாரணையில் டெல்லிபாபுவின் சித்தப்பா மகன் கோகுல்தான், டெல்லிபாபுவிடம் தான் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடன் தொடர்பான பிரச்சனை காரணமாய் அவரை கூலிப்படை வைத்து கடத்திச் சென்று எரித்து கொலை செய்தார் என தெரியவந்தது. 
கூலிப்படை தலைவன் மதுரவாயல் கார்மேகம் இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டான். கோகுலின் மச்சான் பூபாலன், கார் டிரைவர் சுந்தர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கார்மேகமும் கோகுலும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கப்பல் கேப்டன் ஒருவர் கடன் பிரச்சனையில் கடத்தி கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment