Wednesday, May 23, 2012

நடிகர் விபச்சாரியுடன் சிக்கியதும், உளவுத் துறையின் கைங்கார்யம்!

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் மேற்கொண்ட ‘வழமைக்கு மாறான’ உளவு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது பாலஸ்தீன நியூஸ் ஏஸென்சி WAFA (இது ஒரு காலத்தில் அரபாத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செய்திப் பிரிவாக இருந்தது). அதில் சுவாரசியமான சில விஷயங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு (2011) சவுதி அரேபியாவில், பாலைவனப் பறவை (Desert vulture) ஒன்று நகருக்குள் பறந்தபோது பிடிக்கப்பட்டது. அதன் கால்களில் பட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில், GPS ட்ரான்ஸ்மிட்டர் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்-அவிவ் பல்கலைக்கழகம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்த GPS ட்ரான்ஸ்மிட்டரை ஆராய்ந்தபோது, இஸ்ரேலிய உளவுத்துறையின் ‘ஆபரேஷன் கோபப் பறவைகள்’ (Operation Angry Birds) என்ற உளவுத் திட்டத்துக்காக உளவு பார்க்க, பாலைவனப் பறவைகளை மொசாத் பயிற்றுவித்து, சவுதி அரேபியாவில் பறக்கவிட்ட விபரம் தெரியவந்தது.

மனிதர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால், சவுதி அரேபியாவால் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை.

அதே ஆண்டு, துருக்கியின் இரு பிரபல சினிமா நடிகர்கள் சிக்கல் ஒன்றில் சிக்கிக் கொண்டார்கள். விபச்சாரிகளுக்கான சிவப்பு விளக்கு பகுதியில் இந்த இரு நட்சத்திரங்களும் காணப்பட்டதாக போட்டோக்கள் வெளியாகின. இரு நடிகர்களும் அதை மறுத்தனர்.

அதன்பின், இரு நடிகர்களில் ஒருவர் தனியார் துப்பறியும் ஏஜென்சி ஒன்றை அமர்த்தி இதுபற்றி விசாரிக்கவே, அந்த விவகாரமே இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் வேலை என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மொசாத்தின் கைகள் இருந்ததை துருக்கி நாட்டு உளவுத்துறையும் உறுதி செய்தது.

ஆனால், இந்த இரு நடிகர்களையும் விபச்சார விவகாரத்தில் மொசாத் சிக்க வைத்தது ஏன் என்று இன்னமும் தெரியவில்லை.

இந்த ஆண்டு துவக்கத்தில் துருக்கியில் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. துருக்கியின் தென்-கிழக்குப் பகுதி கிராமம் ஒன்றில் ‘தேன் குடிக்கும் பறவை’ ஒன்று தரையில் வீழ்ந்து இறந்து கிடக்க காணப்பட்டது. அதன் கால்களின் மேல் பகுதியில் இரும்பு வளையம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது.

இந்த இரும்பு வளையத்தை ஆராய்ந்தபோது, அதில் இஸ்ரேல் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இரும்பு வளையத்துக்கு உள்ளே மைக்ரோ சிப் ஒன்றும் காணப்பட்டது.

இந்த சம்பவத்தின்பின், துருக்கிக்கு சீசன்தோறும் வரும் வெளிநாட்டு பறவைகள்மீது ஒரு கண் வைக்கத் துவங்கியுள்ளது துருக்கி உளவுத்துறை. ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

இஸ்ரேலின் மற்றொரு உளவுத்துறை ஐ.டி.எஃப். (IDF – Israeli Defense Forces), சைப்பிரஸ் நாட்டுக்குள் ரகசிய கமாண்டோக்களை அனுப்பியுள்ளதாக தகவல் ஒன்று லீக் ஆனது. இந்த தகவல் லீக் ஆகும் முன்னரே, இஸ்ரேலிய கமாண்டோக்கள் சைப்பிரஸ் நாட்டுக்குள் வெற்றிகரமாக புகுந்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

சைப்பிரஸ் தலைநகர் நிகோசியாவின் மையப் பகுதியின் இப்போது பெரிய அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. “சந்தேகத்துக்குரிய இஸ்ரேலியர் யாரையாவது பார்க்க நேர்ந்தால், உடனடியான போலீஸை 155 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழையுங்கள்” என்ற வாசகங்கள் அதில் உள்ளன!

தமது நாட்டுக்குள் மற்றொரு நாட்டு உளவாளிகள் ஊடுருவியிருப்பதை, இதைவிட வெளிப்படையான ஒரு அரசாங்கத்தால் சொல்ல முடியாது.


No comments:

Post a Comment