Wednesday, May 23, 2012

மதுரை கலெக்டர் சகாயம் திடீர் இடமாற்றம்!

 Madurai Collector Sahyam Shifted

மதுரை மாவட்ட கலெக்டராக செயல்பட்டு வந்த சகாயம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மதுரை மாவட்ட கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர் சகாயம். நேர்மையான செயல்பாடுகளுக்குப் பெயர் போனவர் சகாயம் என்பதால் அவரது செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டன.

சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகும் கூட சகாயம் தொடர்ந்து மதுரை கலெக்டராக செயல்பட்டு வந்தார். அவரது செயல்பாடுகள் மக்களால் பாராட்டப்பட்டு வந்தன. தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் பலமுறை மாற்றப்பட்டு வந்த போதிலும் சகாயம் மட்டும் மாற்றப்படாமல் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சகாயம் திடீரென மாற்றப்பட்டு விட்டார்.

அவரை உப்புச் சப்பில்லாத கோ ஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராக அரசு மாற்றியுள்ளது அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளது.

மதுரை ஆதீன விவகாரம் தற்போது மதுரையில் சூடுபிடித்துள்ளது. நித்தியானந்தா மீது சரமாரியாக பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. சகாயத்திடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சகாயம் உறுதியளித்திருந்தார். இந்தப் பின்னணியில் அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை ஆதீன விவகாரம் தவிர மு.க.அழகிரியின் மகன் தயாநிதி பெயரிலான தயா சைபர் பார்க் விவகாரத்திலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார் சகாயம் என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment