Wednesday, May 23, 2012

புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியில் சிக்கல்! வைகோவுடன் அவசர ஆலோசனை!!


இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக முன்பு செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தனி ஈழம் வேண்டாம் என்று கூறியுள்ள கருத்து, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.வுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் தமிழகம் வந்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமீபத்தில் இலங்கையின் சிங்கக் கொடியை அசைத்ததும், ஈழம் வேண்டவே வேண்டாம் என்று அடித்துக் கூறியதும், அக் கட்சியின் சில எம்.பி.க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இரா.சம்பந்தனை கட்சித் தலைமையில் இருந்து அகற்றி புதிய தலைவர் ஒருவரை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.


ஸ்ரீதரன் எம்.பி. இன்று வைகோவை சந்தித்தபோது..

அது தொடர்பாக வைகோவின் ஆதரவை பெறுவதற்கே, ஸ்ரீதரன் எம்.பி. அவசர விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவருகிறது.

சம்பந்தருக்கு எதிரான அணி ஒன்று (ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் உள்ளன) ‘ஊடகப் போராளி’ சரவணபவன் என்பவரை தலைவராக முன்னிறுத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது தலைமைக்கு ஆதரவு கோரியே வைகோவை சந்தித்துள்ளார் ஸ்ரீதரன் எம்.பி. என்று கூறப்படுகிறது.

சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்ட எம்.பி.-யாக உள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர் இவர்தான் என்பதால், ஊடகப் போராளி என அழைக்கப்படுகிறார்.

வைகோவின் ஆதரவு கிட்டினால், ஊடகப் போராளி சரவணபவனுக்கு, நெடுமாறன், சீமான் ஆகியோரின் ஆதரவையும் திரட்ட முடியும் என அவரது குழு நம்புகிறது என்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளதாக தெரியவருகிறது. சமீபத்தில் லண்டனில் பேட்டியளித்த சரவணபவன், தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் அல்ல, இரா.சம்பந்தன்தான் என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்தை அவர் வாபஸ் பெற்றால்தான், அவருக்கு ஆதரவு தரமுடியும் என்று இன உணர்வு அமைப்புகள் கூறுகின்றன.

இரா.சம்பந்தனால் கட்சிக்குள் அழைத்து வரப்பட்டவரும், சம்பந்தனின் நெருங்கிய உறவினருமான சரவணபவன் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் வேறு ஒரு செயல்திட்டம் வகுத்துள்ளார் என்கிறார்கள்.

சம்பந்தனை கௌரவ தலைவராகவும், தம்மை செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஊடகப் போராளியின் நிலைப்பாடு.

இந்த நிலையில், சரவணபவனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீதரன் எம்.பி. இன்று வைகோவை சந்தித்த அவர், தொடர்ந்தும் சில தினங்கள் தமிழகத்தில் தங்கியிருந்து, மற்றைய கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment