2-வது திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக டாக்டர் ராணி தொடர்ந்த வழக்கில் ஜுன் 19-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
டாக்டர் ராணி புகார்
திருச்சி குமரன்நகரை சேர்ந்தவர் டாக்டர் ராணி (வயது46). இவர், "திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரஞ்சோதி, தன்னை 2-வது திருமணம் செய்து கொண்டும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் வாங்கி கொண்டும் ஏமாற்றிவிட்டார்'' என்று திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் திருச்சி கோர்ட்டு ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் டாக்டர் ராணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, பரஞ்சோதி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பரஞ்சோதி எம்.எல்.ஏ. மீது வழக்கு
இதைத்தொடர்ந்து பரஞ்சோதி எம்.எல்.ஏ., அவரது கார் டிரைவர்கள் சம்பத், குமார் ஆகிய 3 பேர் மீதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். இதையடுத்து அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த பரஞ்சோதி தனது பதவியை ராஜினமா செய்தார். மேலும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
அதன்பின்பு பரஞ்சோதி எம்.எல்.ஏ.விடமும், டாக்டர் ராணியிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் ராணி பல ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்து 150 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி கடந்த 10-ந்தேதி திருச்சி ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் டாக்டர் ராணி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதன்படி இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ராஜாராம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் ஆஜரான போலீசார் தரப்பில் கோர்ட்டில் கூறுகையில், பரஞ்சோதி எம்.எல்.ஏ. விசாரணைக்கு போதுமானதாக ஒத்துழைக்கவில்லை எனவும், டாக்டர் ராணிக்கு எழுதி கொடுத்த பத்திரத்தில் உள்ள கையெழுத்து மற்றும் ஆவணங்களில் உள்ள கையெழுத்து பற்றிய விரல் ரேகை நிபுணர்கள் அறிக்கை வராததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆகிறது என்று தெரிவித்தனர்.
ஜுன் 19-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை...
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு ராஜாராம் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(ஜுன்) 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் பரஞ்சோதி எம்.எல்.ஏ. மீதான வழக்கில் ஜுன் 19-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விரல் ரேகை நிபுணர்களின் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment