Monday, April 30, 2012

அழகிரி அதிரடி “மதுரையில் இசக்கி இன்னமும் நம்ம கட்சிக்காரர்தான்!”

சென்னையில் இருந்து ஸ்டாலினும், தி.மு.க. தலைமையும் என்னதான் உத்தரவு அனுப்பினாலும், மதுரையில் அவை செல்லுபடியாகாது என்பதை மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கை மூலம் காட்டியிருக்கிறார் மு.க.அழகிரி.

“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இசக்கிமுத்துவை அவர் ஏற்கனவே வகித்த கட்சிப் பதவியிலேயே தொடர்வதாக கருத வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் தி.மு.க. நிகழ்ச்சிகளில் அவரை புறக்கணிக்க கூடாது” என்று லோக்கலில் வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் அழகிரி. “சென்னையில் இருந்து வரும் உத்தரவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எந்த உத்தரவு வந்தாலும் இங்கே (மதுரையில்) மாற்றம் ஏதும் கிடையாது” என்பதே அழகிரியின் வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் மதுரை தி.மு.க.-வில்.

சமீபத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மதுரை வந்தபோது அவரை வரவேற்க ஏன் வரவில்லை என்று காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இசக்கிமுத்துவும் ஒருவர். மற்றையவர்களுக்கு நோட்டீஸ் மட்டுமே போனது. ஆனால் இவருக்கோ, கட்சிப் பதவி மற்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்து ஆகிய அனைத்துமே கோவிந்தா ஆனது!

அழகிரி ஆதரவாளரான இவரை, மிகச் சுலபமாக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, சென்னையில் இருந்து அறிவித்தல் அனுப்பியது ஸ்டாலின் தரப்பு. அது அழகிரிக்கு கொடுக்கப்பட்ட நோஸ்கட் என்றது ஸ்டாலின் தரப்பு.

சீனாவில் இருந்து மதுரை திரும்பிய அழகிரி, தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸ்களை ‘போடவேண்டிய இடத்தில்’ போட வைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால், சந்தடி சாக்கில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இசக்கியை உடனடியாக மறுபடியும் கட்சிக்குள் கொண்டுவருவது அவருக்கும் சுலபமான காரியமல்ல.

“ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத உங்களது ஆதரவாளர் இசக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரே?” என அழகிரியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, “தி.மு.க.வில் நிர்வாகிகள் நீக்கம் என்பது சகஜமான ஒன்று” என்பதே அழகிரியின் பதிலாக இருந்தது. அந்தப் பதில், “அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது” என்பதையே குறிக்கிறது என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

இசக்கியை ஒரு மாதம் வெயிட் பண்ணும்படியும், அதற்குள் மீண்டும் கட்சிக்குள் அதே போஸ்ட்டில் கொண்டுவந்து விடுவதாகவும் அழகிரி உறுதியளித்திருப்பதாக மதுரை உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அந்த இடைப்பட்ட காலத்திலும் அவர், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மதுரையில் கருதப்பட மாட்டார்.

இந்த விவகாரத்தில் ஜெயித்தது அழகிரியும் இல்லை, ஸ்டாலினும் இல்லை… இசக்கிதான்!

No comments:

Post a Comment