Monday, April 30, 2012

அழகர்கோவிலில் சித்திரை திருவிழா: கள்ளழகர், தங்கப்பல்லக்கில் 4-ந்தேதி மதுரை புறப்படுகிறார்


பிரசித்தி பெற்ற அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா 2-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. 4-ந்தேதி மாலையில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டு வருகிறார். 6-ந்தேதி ஆற்றில் இறங்குகிறார்.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது சித்திரை பெருந்திருவிழா. இதில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாகும். தென் திருப்பதி என்றும், திருமாலிஞ்சோலை என்றும் போற்றி அழைக்கப்படும் இக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா முன்னோட்ட நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி சர்வ அமாவாசை அன்று மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்தத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து அழகர் எழுந்தருளும் மண்டகப் படிதாரர்கள் அனைவரும் அலங்கார பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

அழகர்கோவிலில் இந்த திருவிழா மே மாதம் 2-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. தொடர்ந்து 3-ந்தேதியும் கோவிலிலே திருவிழா நடக்கிறது. இரண்டு நாட்களும் மேளதாளங்கள் முழங்கிட சுவாமி புறப்பாடு நடைபெறும்.

பின்னர் 4-ந்தேதி மாலையில் 6 மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்க வர்ணக்குடைகள், தீவட்டி பரிவாரம் மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்துடன் கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக உள்ள மண்டபங்களில் அழகர் காட்சி தருகிறார்.

5-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கடச்சனேந்தல், மூன்று மாவடியில் புதூர் பகுதியில் பக்தர்கள் எதிர் சேவை செய்து அழகரை வணங்கி அழைப்பாளர்கள். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜபதி கோவிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாளின் திருமாலையை அழகருக்கு சாற்றி பக்த கோடிகளுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அழகரை தரிசனம் செய்வார்கள்.

7-ந்தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் அழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்றிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.

8-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலம். 9-ந்தேதி இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கு விழா. 10-ந்தேதி காலை 10.30 மணிக்கு கள்ளழகர் மலைக்கு போய் கோவிலில் இருப்பிடும் சேருகிறார். 11-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி சீ.செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment