Monday, April 30, 2012

சிறைப் பறவை திவாகரன்: 5-ல் வெளியே; 6-ல் உள்ளே; 7-வது வருமா?


முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைத்திருப்பது அவரது தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 48 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த காரணத்தால், 10,000 ரூபா செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்ற உத்தரவு கிடைத்திருக்கிறது அவருக்கு.
திவாகரன்மீது இன்றைய தேதியில் மொத்தம் 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 5-வது வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள ஜாமீன். திவாகரன் சுமார் 2 மாத காலமாக ஜெயிலில் உள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு திவாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது, திவாகரன் சார்பில் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய வக்கீல், “எனது கட்சிக்காரர்மீது உள்நோக்கத்துடன் மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்கள். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து விட்டது. எனவே, திவாகரனுக்கு ஜாமீன் தர வேண்டும்” என்றார்.
போலீஸ் தரப்பு அதை எதிர்த்தது. கூடுதல் பப்ளிக் பிராசிக்யூட்டர், “இந்த வழக்கில் புலன் விசாரணை (!) இன்னும் முடியவில்லை” என்று மறுத்தார். அதே காரணத்துக்காக ஜாமீன் தரக்கூடாது என்றார்.
ஆனால், இதுபோன்ற சிறிய வழக்கு புலன் விசாரணைக்கு அதிக கால அவகாசம் எடுக்கப்படுவதை நீதிபதி சுட்டிக்காட்டினார். “48 நாட்களுக்குமேல் திவாகரன் சிறையில் உள்ளதால், புலன்விசாரணைக்கு போதிய கால அவகாசம் இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கிறேன். 10,000 ரூபாவுக்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு தனிநபர் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், திருவாரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று உத்தரவிட்டார்.
6-வது வழக்கிலும் இதே நிலைமைதான் உள்ளது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில் 7-வது வழக்கு வருமா, அல்லது திவாகரன் வெளியே வருவாரா என்றுதான் தெரியவில்லை.

No comments:

Post a Comment